Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

சிவப்பு ஒயின் ஏன் உடலுக்கு நல்லது ?

சிவப்பு ஒயின் அருந்தும் ப்ரெஞ்ச் மக்கள் நிறைய பாலாடைக்கட்டியும், வெண்ணெய் இனிப்புகளும் சாப்பிட்டாலும், ஏன் அவர்களுக்கு மற்றவர்களைவிட குறைவான இருதய நோய்கள் வருகின்றன என்பதை இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து, சிவப்பு ஒயினில் உள்ள தனிப்பட்ட புரோட்டான்களை அடையாளம் கண்டிருக்கிறார்கள்.
பாலிஃபீனால்கள் எனப்படும் மூலக்கூறுகள் சிவப்பு திராட்சையின் தோலில் இருப்பதையும், நம் உடலில் தோன்றி ரத்தக்குழாய்களின் சுவர்களில் படிந்து ரத்த ஓட்டத்தை தடுத்து, இருதயத்துக்குச் செல்லும் ஆக்ஸிஜனை குறைக்கும் புரோட்டான்களை இந்த பாலிஃபீனால்கள் உருவாகாமல் தடுப்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள். எண்டோல்ஃபின்-1 என்ற இந்த புரோட்டான் இருதய நோய் உருவாவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதற்கு முன்பே நடந்த பல ஆராய்ச்சிகளில் தினந்தோறும் சிறிய அளவில் எடுத்துக்கொள்ளும் சிவப்பு ஒயின் இருதய நோய் வராமல் தடுப்பதை கண்டறிந்திருப்பதை ஊர்ஜிதம் செய்கிறது. முன்பு நடந்த ஆராய்ச்சிகளில் பாலிஃபினால்களின் ஆண்டி-ஆக்ஸிடெண்ட் குணங்களை குறிப்பாக ஆராய்ந்திருக்கின்றன. (நம் உடலில் இருக்கும் செல்கள் தங்களுக்குள் பல வேதி வினைகளைச் செய்கின்றன. இந்த வேதிவினைகளின் பக்க விளைவாக பல வேதிப்பொருட்கள் தோன்றுகின்றன. முக்கிய வேதிப்பொருட்கள் நம் உடலுக்குத் தேவையானவை. ஆனால் சில வேதிப்பொருட்கள் நம் உடலை அழிப்பவை. இந்த வேண்டாத வேதிபொருட்களை சுதந்திர வேதிகள் (free radicals) என்று அழைக்கிறார்கள். இந்த சுதந்திர வேதிகள் நம் உடலுக்குத் தீங்கு தருபவை. ஒரு கோட்பாட்டின் படி இந்த சுதந்திர வேதிப்பொருட்களே நம் உடலை முதுமை அடைய வைக்கின்றன என்று கூறுகிறது. ) சிவப்பு ஒயினில் உள்ள பாலிஃபீனால்கள் நம் உடலில் உள்ள சுதந்திர வேதிகளை அழிக்கின்றன என்று முன்பு கண்டார்கள். இந்த புதிய ஆய்வு சிவப்பு ஒயினில் உள்ள மற்ற பலன்களைப் பற்றிப் பேசுகிறது.

டிஸம்பர் 20/27 தேதியிட்ட நேச்சர் இதழில் இந்த கட்டுரை வெளியாகி உள்ளது. நம் உடலில் உள்ள செல்களைக் கட்டுப்படுத்தும் முக்கியமான என்ஸைம்கள் டைரோஸீன் கினாஸெஸ்கள் என்னும் புரோட்டான்கள். இந்த சிவப்பு ஒயினின் பாலிஃபீனால்கள் இந்த என்ஸைம்களை தடுக்கின்றன.
'சிவப்பு ஒயின்களில் இருக்கும் சில குறிப்பிட்ட பாலிஃபீனால்கள் புரோட்டான் டைரோஸீன் கினாஸஸ்களைத் தடுக்கின்றன. இது எண்டோதிலீன் உருவாக்கத்தை தடுக்கிறது ' என்று கூறுகிறார் இதை ஆராய்ந்த டாக்டர் ரோஜர் கார்டோர். 'இந்த விளைவு இதன் ஆண்டி ஆக்ஸிடெண்ட் குணங்களுக்குச் சம்பந்தமில்லாதது '
திராட்சைத் தோல்கள் இல்லாமல் வெள்ளை ஒயின் தயாரிக்கப்படுகிறது. ஆனால் சிவப்பு ஒயின் சிவப்பு திராட்சைத் தோல்களோடு சேர்த்து அதன் சாறு புளிக்க வைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. திராட்சையின் தோல் சிவப்பு ஒயினுக்கு அதன் வண்ணத்தைக் கொடுக்கிறது. அதே நேரம் இந்த ஒயினில் தோலில் இருக்கும் பாலிஃபீனால்களும் சேர்கிறது. மற்ற மதுக்களில் இந்த பாலிஃபீனால்கள் இருப்பதில்லை.
'ஒன்று அல்லது இரண்டு கோப்பை சிவப்பு ஒயின் ஒரு நாளைக்கு குடிப்பது நிச்சயம் இருதய நோயைக் கட்டுப்படுத்தும். ஆனால் மது அருந்துவதால் மற்ற உடல் தீங்கு வரும் என்ற மருத்துவ ஆலோசனை இருந்தால் ஒயின் குடிக்கலாகாது. அதாவது அவர் வண்டி ஓட்டவோ, கவனமான வேலை செய்யவோ இல்லாமல் இருந்தால் சிவப்பு ஒயின் குடிக்கலாம் ' என்று கார்டோர் கூறுகிறார்.
ஆல்கஹால் இல்லாத சிவப்பு ஒயின், ஆல்கஹால் இல்லாத வெள்ளை ஒயின், ஆல்கஹால் இல்லாத ரோஸ் ஒயின் போன்றவற்றைக் கொண்டு பசுவின் ரத்தக்குழாய்களில் பரிசோதனை நடத்தி இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள் சிவப்பு திராட்சையின் சாறு மட்டும் எடுத்தும் ஆராய்ச்சி நடத்தினார்கள். ஆனால் விளைவு சிவப்பு ஒயின் அளவுக்கு இல்லை

காதை குடையிறதுதான் வேலை...

பக்கத்துவீட்டு பையன் நீச்சலடித்த பிறகு காதுவலியோடு வந்தான். நீந்திய பிறகு காது அடைப்பது போல இருந்ததாம். காதுக்குள் தண்ணி போய்விட்டதென எண்ணி இயர்பட்ஸ் வைத்துத் துடைத்தான். வலி மோசமாகிவிட்டது. காதுக்குள் குடுமி இருந்தால் குளிக்கும்போதோ நீந்தும் போதோ நீர் உட்சென்றால் காது அடைக்கும். அது தற்காலிகமானது. உட்காதுக்குள் நீர் போய்விட்டதோ என பயப்பட வேண்டியதில்லை. காதுக்குடுமி நீரில் ஊறிப் பருத்ததால் காது அடைப்பது போன்ற உணர்வு ஏற்படும். அது உலர அடைப்பு எடுபட்டுவிடும். இந்தப் பையன் இயர்பட்ஸ் வைத்து நீர் எடுக்க முயன்றபோது குடுமி காதின் உட்பக்கமாக நகர்ந்து செவிப்பறையை அழுத்தியதால் கடுமையான வலி ஏற்பட்டது. நல்ல காலம் செவிப்பறை உடையவில்லை. உடைந்திருந்தால் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

குளிக்க வைக்கும் போது கைக்குழந்தைக்கு காதுக்குள் தண்ணி போனது என அதைச் சுத்தப்படுத்தப்போய் குழந்தையைச் செவிடாக்கியிருக்கிறார்கள் பல பாட்டிமார்கள்.

காதுக்குள் தண்ணீர், காதுக்கடி, அரிப்பு என எத்தனையோ காரணங்களுக்காக தேவையற்று காதைச் சுத்தப்படுத்த முனைவதால் ஏற்படும் பாதிப்புகள் இவை. காது குப்பைக் கூடையோ, சுத்தப்படுத்த வேண்டிய உறுப்போ அல்ல. காதுக்குள் உற்பத்தியாகும் குடுமி, காதைப் பாதுகாப்பதற்காகவே சுரக்கிறது. அதை நீங்கள் அகற்ற வேண்டியதில்லை.

காதைச் சுத்தப்படுத்த வேண்டும் என நீங்கள் விரும்பினால் குளிக்கும்போது தலையைச் சற்று சரித்துப் பிடித்துக் கொண்டு காதுக்குள் கைகளால் ஏந்திய சுத்தமான தண்ணீரை ஊற்றுங்கள். பின் தலையை மறுபக்கமாகச் சரிக்க நீர் வெளியேறிவிடும். இவ்வாறு இரண்டு மூன்று தடவைகள் நீர் விட்டு சுத்தப்படுத்தலாம். காதுக்குள் விடும் நீர் தலைக்குள் போகாது, செவிப்பறை தடுக்கும். ஆயினும் காதிலிருந்து சீழ் அல்லது நீர் வடிபவர்கள் இவ்வாறு நீர் விட்டுச் சுத்தப்படுத்தக் கூடாது. இப்படிச் சுத்தம் செய்யும்போது காது அடைத்தால் பயப்படாதீர்கள். நீர் உலர்ந்ததும் அடைப்பு மறைந்துவிடும்.