பாடாய்ப் படுத்தும் வெயில்

வெயில் காலம் என்றாலே திண்டாட்டம்தான். அதுவும் சென்னை மாதிரி இடத்தில். கத்திரி வெயில், சித்திரை வெயில் என்று புலம்புகிறோம். கொதிக்கும் வெயிலில் நடந்தால் தலை வலிக்கிறது. சென்னை போன்ற கடலோர நகரங்களில் வியர்வை பெருக்கெடுத்து ஓடுகிறது. நாக்கு வறண்டு தாகம் எடுத்து, பாட்டில் பாட்டிலாக நீர் குடிக்கவேண்டியுள்ளது. தர்பூசணி, எலுமிச்சை பிழிந்த கரும்புச் சாறு, குளிரூட்டப்பட்ட கோக-கோலா, ஐஸ் போட்ட பழரசம், பானைத் தண்ணீர், நீர் மோர் என்று பதறுகிறோம்.

இதை எப்படி நாம் புரிந்துகொள்வது?

கோடையில் அப்படி நம் உடம்பில் என்னதான் மாறுதல் ஏற்படுகிறது?

கோடைக் காலத்தில், நாம் இருக்கும் பூமியின் பகுதி சூரியனுக்கு அருகில் செல்கிறது. பூமி சற்றே சாய்ந்த அச்சில் சுழல்வதால்தான் இது நிகழ்கிறது. பூமியை இரு அரைக் கோளங்களாக எடுத்துக்கொண்டால் வட அரைக்கோளத்தில் கோடைக் காலம் என்றால் தென் அரைக்கோளத்தில் அப்போது குளிர் காலம். உதாரணமாக இந்தியா, வட அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களில் கோடைக் காலம் நடக்கும்போது ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் குளிர். அதேபோல ஆஸ்திரேலியாவில் கோடைக் காலம் நடக்கும்போது இந்தியாவில் குளிர் காலமாக இருக்கும்.

சூரியனுக்கு அருகில் செல்கிறோம் என்றாலும் ஒரு அரைக்கோளத்தில் உள்ள எல்லாப் பகுதிகளும் ஒரே மாதிரி அருகில் இருப்பதில்லை. நில நடுக்கோட்டுக்கும் கடக (அல்லது மகர) ரேகைக்கும் இடைப்பட்ட பகுதி சூரியனுக்கு நெருக்கமாக உள்ளது. இந்தப் பகுதியை வெப்ப மண்டலம் (ட்ராபிகல்) என்கிறோம். கடக ரேகையிலிருந்து இன்னும் கொஞ்சம் தாண்டி வட துருவத்தை நோக்கிப் போனால், வெப்பமண்டலத்தில் உள்ள அளவு வெப்பம் இருக்காது. சற்றுக் குறைவுதான். இந்தப் பகுதிக்கு மிதவெப்ப மண்டலம் (டெம்பரேட்) என்று பெயர். அதற்கும் அடுத்து, துருவம்வரை செல்லும் பகுதியில் அதிகபட்சமாக வெளிச்சம் இருக்கும். சூடு ஏதும் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. கண் எதிரே ஐஸ் கட்டித் தரைகூட இருக்கும். இந்தப் பகுதிக்கு துருவ மண்டலம் (போலார்) என்று பெயர்.

கோடையில் வெப்ப மண்டலத்தில் சூடு உச்சக்கட்டத்தில் இருக்கும். ஆனால் ஏன் சென்னை போன்ற கடலோர நகரங்களில் இப்படி அதிகமாக வியர்க்கிறது? வீட்டில் உடை அணிந்துகொண்டு வாசல்வரை வருவதற்குள் தொப்பலாக நனைந்துவிடுகிறோமே?

இதற்கு காற்றின் ஈரப்பதம் என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். காற்றில் ஓரளவுக்கு நீராவி உள்ளது. கடலோரப் பகுதிகளில் இந்த நீரின் அளவு அதிகமாக இருக்கும். ஆற்றங்கரை, குளக்கரை என்றாலும் அப்படியே. ஆனால் கடல் பகுதிகளில் மிக மிக அதிகமாக இருக்கும். உதாரணமாக சென்னையில் காற்றின் ஈரப்பதம் 93% என்று உள்ளது. கோவையில் சுமார் 75% மட்டுமே. அதாவது சென்னைக் காற்றில் கோவைக் காற்றைவிட அதிக நீராவி உள்ளது.

இதனால் சென்னையில் நமக்கு ஏன் வியர்க்கவேண்டும்?

மனிதர்கள் உள்ளிட்ட பாலூட்டிகள், பறவைகள் போன்றவை வெப்ப ரத்தப் பிராணிகள் என்று அழைக்கப்படுகின்றன. பாம்புகள், பல்லிகள் போன்ற ஊர்வன குளிர் ரத்தப் பிராணிகள் எனப்படும். இந்தப் பெயர்களிலிருந்து என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினம்! குளிர் ரத்தப் பிராணிகள் எந்தச் சூழலில் உள்ளனவோ அந்தச் சூழலில் என்ன சூடோ அவற்றின் ரத்தமும் அதே சூட்டுக்கு வந்துவிடும்.

அதாவது குளிர்ந்த பாறை இடுக்கில் ஒரு பாம்பு இருக்கிறது; அந்த இடத்தின் சுற்றுப்புற வெப்பம் 15 டிகிரி செண்டிகிரேட் என்றால் பாம்பின் உடலில் ஓடும் ரத்தமும் கிட்டத்தட்ட 15 டிகிரி செண்டிகிரேடில் இருக்கும். அதே பாம்பு கொதிக்கும் 40 டிகிரி செண்டிகிரேட் மணலில் ஓடினால், அதன் ரத்தமும் கிட்டத்தட்ட 40 டிகிரி செண்டிகிரேடுக்கு வந்துவிடும். ஆனால் மனித ரத்தம் அப்படியல்ல. அது எப்போதுமே கிட்டத்தட்ட 37 டிகிரி செண்டிகிரேடுக்கு அருகில் இருக்கவே முயற்சி செய்யும்.

வெளியே கடும் குளிர். 10 டிகிரி செண்டிகிரேட் அல்லது அதற்கும் கீழே. உடனே உடம்பு நடுங்க ஆரம்பிக்கும். கம்பளி போல எதையாவது இழுத்துப் போர்த்திக்கொள்ள முற்படும். கைகளைப் பரபரவென்று தேய்த்துக்கொள்ளத் தோன்றும். சூடாகக் கொஞ்சம் தேநீர் பருக விரும்பும். தம்மடிக்க ஆசைப்படும். எப்படியாவது உடல் சூட்டை, ரத்தத்தின் சூட்டை கிட்டத்தட்ட 37 டிகிரி செண்டிகிரேடில் வைக்க விரும்பும்.

அதேபோல கடுமையான வெயில். கொளுத்துகிறது. வெளியே இருப்பதோ 45 டிகிரி செண்டிகிரேட். என்ன செய்வது? உடலிலிருந்து வியர்வையை வெளியேற்றும். அந்த வியர்வை நீர் காற்றில் ஆவியாகும்போது சுற்றுப்புறம் சற்றே ஜில்லிடும். அதனைக்கொண்டு உடல் சூட்டைக் கொஞ்சம் தணித்து, மீண்டும் 37 டிகிரியை நோக்கி ஓடும்.

ஆனால் இங்குதான் காற்றின் ஈரப்பதம் தொல்லை கொடுக்கும். காற்றில் ஏற்கெனவே எக்கச்சக்கமாக நீராவி இருந்தால், மேற்கொண்டு நீர் ஆவியாக மறுக்கும். எனவே நம் உடலில் தோன்றும் வியர்வைத் துளிகள் ஆவியாகமல் அப்படியே தோல்மீதே வழியும். அதனால் எரிச்சல் ஏற்படும். வியர்வை பெருகி ஆறாகவே ஓடத் தொடங்கும். ஆனாலும் உடல் சூடு குறையாது. மேலும் மேலும் உடலில் உள்ள ரத்தம் தோல் பகுதிக்கு அருகில் வந்து தன்னிடமுள்ள அதிக சூட்டை வெளியேற்ற முற்படும். ஆனால் வெளியிலேயே சூடு அதிகமாக உள்ளதே? என்ன செய்வது?

இந்தக் காரணத்தால் மூளைக்குச் செல்லும் ரத்தம் குறையலாம். உடல் அசதி கொள்ளும். அப்படியே சாய்ந்து தூங்கிவிடலாமா என்று தோன்றும். அதனால்தான் நம்மை அறியாமலேயே வெயில் காலத்தில் மதிய நேரத்தில் ஒரு தூக்கம் போட்டுவிடுகிறோம்.

மற்றொரு பக்கம், உடல் சூட்டைத் தணிக்க நிழலாகப் பார்த்து உட்காருகிறோம். விசிறியால் அல்லது காற்றாடிகொண்டு நம் மீது காற்றை வீசுகிறோம். இந்தக் காற்று நம் உடலில் உள்ள ஈரத்தை அப்படியே அடித்துக்கொண்டு போய்விடும் என்ற விருப்பத்தில்தான். ஆனால் பல நேரங்களில் அதனாலும் பிரயோஜனம் இருக்காது.

அதனால்தான் ஏர் கண்டிஷனிங் என்பதைப் பெரிதும் பயன்படுத்துகிறோம். இந்த ஏர் கண்டிஷனர் என்ற கருவி, ஓர் அறையில் இருக்கும் காற்றில் உள்ள ஈரப்பதத்தை வெகுவாகக் குறைக்கிறது. இதனால்தான் நம் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை உடனடியாக ஆவியாகிறது. மேலும் ஏர் கண்டிஷனர் குளிர்ந்த காற்றை உள்ளே சுழல வைக்கிறது. வெறும் குளிர்ந்த காற்றும் மட்டும் இருந்தால் பயன் இருந்திருக்காது. ஈரப்பதத்தையும் அந்தக் கருவி வெளியேற்றுவதாலேயே கோடையில் அது பயனுள்ளதாக உள்ளது.

அத்துடன் நாம் அவ்வப்போது அருந்தும் குளிர்ந்த நீர், பிற குளிர் திரவங்கள் என அனைத்துமே நம் உடலின் வெப்பத்தைக் குறைக்கின்றன.

மனிதர்கள்தான் ஏர் கண்டிஷனிங் போன்றவற்றைச் செய்யமுடியும் என்று நினைக்காதீர்கள். பிற விலங்குகள் தமக்குள்ள அறிவைக் கொண்டு என்னென்னவோ செய்கின்றன. பொதுவாக விலங்குகள் வெப்பம் அதிகமாக உள்ள சமயத்தில் வெளியில் உலாத்தாமல், அந்த நேரத்தில் இரை தேடாமல் எங்காவது நிழலாகப் பார்த்து அமைதியாகப் படுத்து உறங்க முற்படும். யானை போன்ற மாபெரும் விலங்குகள் லிட்டர் லிட்டராக நீர் குடித்து, காதுகளை விசிறி விசிறி வெப்பத்தைத் தணிக்க முற்படும்.

இயற்கையில் அற்புதமாக வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதில் கரையான்கள் பெயர்போனவை. இந்தக் கரையான்கள் மாபெரும் புற்றுகளைக் கட்டுவதை நாம் ஆங்காங்கே பார்த்திருப்போம். அவற்றுக்கு தவறாக எறும்புப் புற்று அல்லது பாம்புப் புற்று என்று நாம் பெயர்கொடுத்திருப்போம். விட்டால் பக்கத்தில் ஒரு சூலத்தைச் செருகி, வழிபடவே ஆரம்பித்துவிடுவோம். ஆனால் இவற்றைக் கட்டுவது முழுக்க முழுக்க கரையான்கள். பார்க்க வெள்ளையாக இருக்கும். நம் வீடுகளில் உள்ள மரச் சாமான்களை, கதவுகளை எல்லாம் அப்படியே விழுங்கி ஏப்பம் விட்டுவிடும் மிக மோசமான உயிர் இவை.

இந்தக் கரையான்களில் சில மிக புத்திசாலி. இவை தமக்கு உணவாக சில பூஞ்சைகளை விவசாயமே செய்கின்றன. தங்கள் புற்றுக்களுக்கு உள்ளே, பூஞ்சைகளை சேகரித்து, அவை வளர ஆதரவாக மக்கிய இலைகளைக் கொண்டுவந்து போட்டு, வளர்ந்த பூஞ்சைகளை வெட்டி, சேகரித்துவைத்து, அவற்றைத் தின்கின்றன இந்தக் கரையான்கள். இந்தப் பூஞ்சைகள் வளர சரியான வெப்பம் தேவை. அதிகமாகவும் இருக்கக்கூடாது, குறைவாகவும் இருக்கக்கூடாது.

நாளின் பெரும்பகுதி சூரியன் உள்ளது, இரவில் சூரியன் மறைகிறது. இதேபோல கோடை, குளிர் என்று காலங்கள் மாறுகின்றன. கரையான்கள் எப்படி வெப்பத்தைக் கட்டுப்படுத்துகின்றன?

கரையான் புற்றில் அவை பல குழாய் போன அமைப்புகளை உருவாக்குகின்றன. புற்றில் நடுப்பாகத்தில்தான் கரையான்கள் வசிக்கின்றன. அங்கிருந்து தொடங்கி இந்தக் குழாய்கள் புகைபோக்கிகள் போல மேல் நோக்கிச் சென்று வெளிப்புறத்தை அடைகின்றன. வேண்டிய அளவு குழாய்களை மூடி அல்லது திறந்துவிடுவதன்மூலம் எவ்வளவு காற்று வெளியிலிருந்து உள்ளே வரும் என்பதை கரையான்கள் தீர்மானிக்கின்றன. அதைக்கொண்டு மையத்தில் இருக்கும் வெப்பம் ஒரு குறிப்பிட்ட அளவிலிருந்து அதிகம் நகராமல் கரையான்கள் பார்த்துக்கொள்கின்றன.

*

இன்று புவி சூடேற்றம் பிரச்னையாக ஆகியுள்ள நிலையில் நம் வீடுகளையும் நம்மால் கரையான்களைப் போல வடிவமைத்துக் கட்டமுடியும். இங்கும் அங்கும் சில ஜன்னல்களையும் துவாரங்களையும் முடுவதன்மூலமும் திறப்பதன்மூலமும் வீட்டில் பல பகுதிகளிலும் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியும். ஏர் கண்டிஷனர்களைக் குறைக்கமுடியும்.

எந்த விதத்தில் ஆற்றலை வீணடிக்காமல் இருக்கிறோமோ, அந்த அளவுக்கு பூமியின் வாழ்நாளையும், பூமியின் மனித சமுதாயத்தின் வாழ்நாளையும் நாம் நீட்டிக்கலாம்.