பட்டாம் பூச்சி

வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்க என்ன செய்ய வேண்டும் என  குருவிடம்  சீடன்  கேட்டான்.குரு அவனை ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.வித விதமான பட்டம் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன.குரு சீடனை ஒரு பட்டாம் பூச்சியைப் பிடித்து வரச்சொன்னார்.எவ்வளவோ ஓடி முயன்றும் அவனால் ஒரு பட்டாம் பூச்சியைப் பிடிக்க முடிய வில்லை.''பரவாயில்லை,நாம் இந்தத்  தோட்டத்தின் அழகை ரசிக்கலாம்''எனக்கூறி குரு சீடனை தோட்டத்தின் மையப் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.இருவரும் தோட்டத்தின் அழகைக் கண் குளிரக் கண்டு களித்தனர்.சிறிது நேரத்தில் அவர்களைச் சுற்றி பட்டாம் பூச்சிகள் பறக்கத் தொடங்கின.சீடன் துரத்திய பட்டாம் பூச்சி அவன் கைகளிலேயே இப்போது வந்து அமர்ந்தது.குரு சிரித்தார்.
''இது தான் வாழ்க்கை.மகிழ்ச்சியைத் தேடித் துரத்துவது வாழ்க்கை அல்ல. நாம் வாழ்வை அமைதியாக ரசிக்கும் போது மகிழ்ச்சி  தானே கிடைக்கும்,''என்றார் குரு.