ஓய்வு பெற்ற அதிகாரி

கோப்புகளுடன் குடித்தனம் முடித்தார்.
கோடிக் காகிதங்களில் கோடுகள் கிழித்தார்.
இன்று....
வீட்டு விலாசம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்.
உறவின் முகங்களை உற்றுப் பார்க்கிறார்.
பதவிப் போதையின் பைத்தியம் தெளிந்தது.
எத்தனை முறை மணி அடித்தாலும்
எதிரொலியும் எழுந்து வராது.
வழிய வந்த அமைதி வலிக்கிறது.
இன்று....
விரும்பி உடனிருப்பவை, வியாதிகள் மட்டுமே.
**********
தந்தை
என்னைத் தூக்கி சுமக்கையில் மகிழ்ந்தவனே,
உன்னைத் தூக்கிடும்போது அழுதிருந்தேன்.
**********
தாய்
சுமந்து வளர்த்த புள்ள சுகமாச்சி.
சோத்த போட்ட தாயே இன்று சுமையாச்சு.
**********
காணிக்கை
கோவில் வாசலில்
  பிச்சைக்காரர்கள்!
சரி........
கோவிலுக்குள்ளே மட்டும் யாராம்?
**********
பிள்ளைகளே....
புத்தகங்களே
பிள்ளைகளைக்
கிழிக்காதீர்!
**********